News Update :

மும்பை - கற்பழிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்

Sunday, August 25, 2013

மும்பையில் கடந்த 22-ம் தேதி இரவு புகைப்பட பெண் பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை பொலிஸார் கைது செய்தனர். அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி நேற்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீஸாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் நேற்று மாலை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் உடல்நிலை தேறி வருகிறது.

போலீஸாரிடம் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாவது,

மும்பை மகாலக்ஷ்மி ரெயில் நிலையம் அருகே உள்ள சக்தி மில்லிற்கு நானும் எனது சகப்பணியாளரும் சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் புகைப்படம் எடுப்பதற்காக சென்றோம். 

அப்போது மில்லின் உள்ளே இருந்து வந்த 2 பேர் இந்தப் பாதை வழியாக போக வேண்டாம். வேறு நல்ல பாதை வழியாக அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றனர். 

நாங்கள் புகைப்படம் எடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்தபோது உள்ளே வந்த 3-வது நபர் தன்னை ரெயில்வே ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். 

"எங்கள் முதலாளிக்கு தெரியாமல் நீங்கள் இந்த மில்லை புகைப்படம் எடுப்பதை அவர் அறிந்து கொண்டார். உங்களை அழைத்து வரச் சொன்னார்" என்று அந்த நபர் எங்களை மிரட்டினார். 

உங்கள் முதலாளியிடம் போனில் பேசுகிறேன் என்று நான் கூறினேன். அதற்கு மறுத்த அந்நபர் தன்னுடன் வரும்படி எங்களை மீண்டும் மிரட்டினார். உடனடியாக எங்கள் பத்திரிகையின் தலைமை புகைப்பட கலைஞரை நான் செல்போனில் தொடர்பு கொண்டேன். 

அவரது லைன் ‘பிஸி’யாக இருந்தது. சற்று நேரத்தில் எனது செல்போனை மீண்டும் அவர் தொடர்பு கொண்டார். ரெயில்வே ஊழியர் என்று கூறி எங்களை ஒருவர் மிரட்டுவதாக நான் தெரிவித்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு வந்துவிடும்படி அவர் கூறினார். 

நாங்கள் இருவரும் வெளிவாசல் வழியாக வர முயன்ற போது குற்றவாளிகளில் ஒருவன் எங்களை வழிமறித்து தடுத்தான். 

சில நாட்களுக்கு முன்னர் அந்த இடத்தில் ஒரு கொலை நடந்ததாகவும் என்னுடன் வந்த சகப்பணியாளர்தான் அந்த கொலையை செய்ததாக கூறி அவன் எங்களை மிரட்டினான். அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எங்களை மில்லின் உள்பக்கத்திற்கு இழுத்துச் சென்றனர். 

எங்களை விட்டுவிடும் படி நாங்கள் கெஞ்சினோம். எங்களிடம் இருந்த கேமராவையும் 2 செல்போன்களையும் ( ஒவ்வொன்றும் சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ளது) தந்து விடுவதாகவும் நாங்கள் கூறினோம். நாங்கள் கூறிய எதையும் காதில் வாங்காத அந்த கும்பல், எங்கள் இருவரின் இடுப்பில் இருந்த பெல்ட்டுகளை கழற்றும்படி சொன்னது. அந்த பெல்ட்டுகளைக் கொண்டு என்னுடன் வந்த சகப்பணியாளரின் கைகளை அவர்கள் கட்டிப்போட்டனர். 

அப்போது உள்ளே நுழைந்த மேலும் 2 பேர் அங்கிருந்த 3 பேருடன் சேர்ந்து கொண்டனர். அவர்களில் 3 பேர் எனது சகப்பணியாளரை அசையவிடாமல் பார்த்துக் கொண்டனர். 2 பேர் மட்டும் என்னை ஒரு சுவற்றின் அருகில் இழுத்துச் சென்றனர். அந்த நேரத்தில் எனது செல்போனில் மணி அடித்தது. 

எதிர்முனையில் பேசிய எனது அம்மா நீ பத்திரமாக இருக்கிறாயா? என்று கேட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் "எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்" எனக் கூறி என்னை மிரட்டினார்கள். அவர்கள் சொன்னது போலவே என் அம்மாவை நான் சமாதானப்படுத்தினேன். 

சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் ஒருமுறை போன் செய்த அம்மா என்னை நலம் விசாரித்தார். அப்போது அவர்களில் ஒருவன் எனது செல்போனைப் பறித்து ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைத்து விட்டான். அதன்பிறகு, ஒரு பீர் பாட்டிலை உடைத்து கூரிய முனையை என் கழுத்தருகே நீட்டி அவர்கள் 5 பேரும் மாறிமாறி என்னை கற்பழித்தனர். என பாதிக்கப்பட்ட மும்பை பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கற்பழிப்பினால் மட்டுமே ஒரு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. இந்த கொடூரக் குற்றத்தை செய்தவர்களுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். என்று கூறிய அவர், குணமடைந்த பிறகு மீண்டும் வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.