News Update :

மழை நீடிக்குமா?

Friday, September 13, 2013

சென்னை உள்பட 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 நாள் பெய்த மழைக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை இன்று பிற்பகல் வரை நீடித்தது. அவ்வப்போது பலமாகவும் தூறலுமாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் பலத்த மழை பெய்கிறது. இதனால் கூவம், பக்கிங்காம், அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.

 சாலையோரங்களில் கழிவுநீர், மழை நீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் நிறைந்துள்ளது. வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். அடையாறு, வேளச்சேரி, ரேடியல் சாலை, திருவொற்றியூர், மணலி, தங்கசாலை, எண்ணூர், பாரிமுனை, பெரம்பூர், மாதவரம் போன்ற பகுதிகளில் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேயர் சைதை துரைசாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வெள்ள நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் மழையால் கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் முடங்கியுள்ளது. கட்டுமான பணிகள் நடக்கவில்லை. மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்தும் குறைந்து விட்டது. இதனால் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
"கடந்த சில நாட்களாக வட தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்துக்கு மேற்கண்ட இடங்களில் பலத்த மழை பெய்யும். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யும். புயல் குறித்து எச்சரிக்கை ஏதும் இல்லை என்றாலும் பலத்த காற்று வீசக் கூடும்." இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுக்க மழைக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். சென்னை அம்பத்தூரில் ஓகுதாஸ் என்பவரும், பெரம்பூரில் பெருமாள் என்பவரும் மின்சாரம் தாக்கி பலியாயினர். திருத்தணியில் குமாரசாமி வீடு இடிந்து விழுந்து இறந்தார். தஞ்சையில் 2 பேரும் திருச்சியில் ஒருவரும் மழைக்கு பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. டிஜிபி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை மானியில் சென்னையில் 12 செ.மீ. மழை பெய்ததாக பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, திருத்தணி, சோளிங்கர், காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் 11 செ.மீ., பள்ளிப்பட்டில் 10, அரக்கோணம், தாம்பரம், செம்பரம்பாக்கம், வட சென்னையில் 9,  திருவாலங்காடு, கலவையில் 8, பூந்தமல்லி, பூண்டி, காவேரிப்பாக்கம் பகுதிகளில் 7, ஆரணி, காஞ்சிபுரத்தில் 6, வாலாஜா, சோழவரம் பகுதிகளில் 5 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.