News Update :

ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழ்

Thursday, August 22, 2013

சென்னை: "சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடும் மொழியாக கொண்டு வருவதில், இதுவரை முடிவு எட்டப்படவில்லை' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு, சென்னை ஐகோர்ட்டில் பாராட்டு விழா நடந்தது. தமிழ்நாடு பார் கவுன்சில் உடன் இணைந்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன், ஆகிய சங்கங்கள், இந்த நிகழ்ச்சியை நடத்தின.

நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது: நான் வழக்கறிஞராக பதிவு செய்த பின், முதல் நாள், என் மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, ஒரு வழக்கில், விசாரணையை தள்ளிவைக்க கோரும்படி, அனுப்பி வைத்தார். அது தான், நான் ஆஜரான முதல் வழக்கு. இளம் வழக்கறிஞர்கள், கடுமையாக உழைத்தால், நல்ல நிலைக்கு வரமுடியும். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். நீதித்துறையில், உயிர் நாடியாக, வழக்கறிஞர்கள் உள்ளனர். சாதாரண மனிதனுக்கும், சட்டத்துக்கும், பாலமாக, வழக்கறிஞர்கள் திகழ்கின்றனர். பொது மக்கள் மத்தியில், வழக்கறிஞர்கள் பற்றிய எண்ணம் மாற வேண்டும். வழக்கறிஞர்களாக மட்டுமல்லாமல், ஆலோசகர்களாக திகழ வேண்டும். அப்போது தான், வழக்கறிஞர் தொழிலில், மக்களுக்கு மரியாதை ஏற்படும். நீண்ட வாதம், தேவையில்லாமல் வாய்தா கேட்பது, நடைமுறையை தவறாக பயன்படுத்துவது, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தற்போது தகவல் தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், 100 சதவீதம், மின்னணு முறை அமல்படுத்தப்படுகிறது. வழக்கு தாக்கல் செய்யும்போது, வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்களின் இ-மெயில், மொபைல் போன் எண்களை வாங்குகிறோம். வழக்கு தொடர்பான விவரங்களை, அவர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.டில்லி ஐகோர்ட்டில், ஏழு கோர்ட்களில், மின்னணு முறை பின்பற்றப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டையும், மின்னணு கோர்ட் ஆக உருவாக்கவேண்டும். முல்லை பெரியாறு வழக்கு விசாரணை, 21ம் தேதி (இன்று) முடிவுக்கு வரும் என, நம்புகிறேன். இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்.

பின், நிருபர்களிடம், தலைமை நீதிபதி கூறியதாவது: சென்னை ஐகோர்ட்டில், வழக்காடும் மொழியாக, தமிழை கொண்டு வரவேண்டும் என்றால், தமிழ் சுருக்கெழுத்தாளர், தமிழில் சட்டநூல்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முதலில் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே பல கோரிக்கைகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் நீதிபதியாக நான் பதவி வகித்த போது, நீதிபதிகள் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. வழக்கறிஞர்களும், போலீசாரும், பொதுமக்களுக்காக பணி செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இருதரப்பினரும் சுமூகமாக பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ளவேண்டும். தென் மாநிலங்களில், சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பது பற்றி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூட்டம், பல முறை நடந்தது. தலைமை நீதிபதிகள், முதல்வர்கள் மாநாட்டிலும், ஆலோசிக்கப்பட்டது. எந்த முடிவும் எட்டப்படவில்லை. தென் மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் மாநிலத்தில், சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் என கோருகின்றனர். தென் மாநிலங்களில் அமைக்க, இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. சென்னை ஐகோர்ட்டுக்கு, தேவையான அனைத்து நிதி உதவிகளையும் செய்வதாக தமிழக முதல்வரும், மத்திய அரசும் கூறியுள்ளது. ஐகோர்ட்டை மின்னணு கோர்ட் ஆக மாற்றுவதற்கு, நான், ஒரு பாலமாக இருந்து செயல்படுவேன். இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.