News Update :

மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை

Friday, August 23, 2013

சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் அரசு வழங்கும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.

பல்வேறு தேவைகளுக்கு ஆதார் எண் விவரம் அளிப்பது கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தும் பல அரசு நிறுவனங்கள் ஆதார் எண் தருவதை வலியுறுத்தி வருகின்றன என மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்து நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ராஜீவ் சுக்லா பேசியதாவது:

மானியத் தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை. எந்த அரசு நிறுவனமாவது ஆதார் அட்டை விவரங்கள் அளிப்பதை கட்டாயப்படுத்துமானால் அரசு அதனை சரி செய்யும்.வங்கிக் கணக்கு, பள்ளிக்கூட சேர்ப்பு, பாஸ்போர்ட் விண்ணப்பம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் விவரங்கள் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். கேரளத்தில் சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு ஆதார் விவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் கட்டாயமாக்கியுள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ச்சுதன் குறிப்பிட்டார்.

சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் விவரங்கள் கட்டாயம் இல்லை என்று அரசு தெளிவாகக் கூறியும், ஆதார் எண் தொடர்புடைய வங்கிக் கணக்கு அவசியம் என்று கூற அரசு நிறுவனங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்று அவர் கேட்டார்.ஆதார் விவரங்கள் இல்லாத ஒரே காரணத்தால், பல்வேறு திட்டங்களின் கீழ், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மானிய உதவி நிராகரிக்கப்படக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உறுப்பினர் வலியுறுத்தினர்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.